கருணாநிதி நாணயம் தவறாதவர் !

துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பி.கே.சேகர்பாபு, சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மா. சுப்பிரமணியன் 
கருணாநிதி நாணயம் தவறாதவர் !
ஆகியோரை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம் மத்திய அரசின் உதவியோடு தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்டது. 

தி.மு.க. ஆட்சிக்கு பெருமை சேர்ந்து விடும் என்ற ஒரே காரணத்தால் அந்த திட்டத்தையே அ.தி.மு.க. முடக்கி விட்டது.

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை யொட்டி சென்னை கோட்டூர் புரத்தில் ரூ.172 கோடி செலவில் தி.மு.க. அரசால் ஒன்பது தளங்களைக் கொண்ட நூலகம் உருவாக்கப் பட்டது. 

சிங்கப்பூரில் பெருமையாகப் பேசப்படும் நூலகத்தை போன்றது அது. ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து படிக்கலாம். 

ஏழை எளிய வீட்டில் பாடங்களைப் படிக்க முடியாத நிலையில் உள்ள பிள்ளைகள் கூட தங்கள் நூல்களை எடுத்து வந்து இந்நூலகத்தில் அமர்ந்து படிக்க வசதி செய்யப்பட்டது.
தாயுள்ளத்தோடு இத்தகு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. 12 லட்சம் நூல்கள் வரை இடம் பெற முடியும். குழந்தைகள் படிக்கவும், கண் பார்வையற்றோர் படிக்கவும் தனி ஏற்பாடுகள் உண்டு. 

தலைநகரம் மட்டுமல்ல; தமிழ்நாடே பெருமைப்படும் நூலகம் இது.  அண்ணா பெயரில் கட்சி ஆட்சியை வைத்துள்ள அண்ணா தி.மு.க. ஆட்சி என்ன செய்தது? 

அதிகாரத்துக்கு வந்ததும் வராததுமாக அந்த நூலகத்தைக் குழந்தைகள் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றிட முடிவெடுத்தது. நீதிமன்றம் தலையில் குட்டித் தடுத்தது. 

மருத்துவமனை கட்ட வேறு இடம் கிடைக்க வில்லையா என்று கேட்டது நீதிமன்றம். தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்றமும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மருத்துவ மனையாக மாற்றப்பட்டு விட்டது.

மக்கள் நலப்பணியாளர்கள் 13 ஆயிரம்பேர் தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப் பட்டனர் என்பதற்காக பணி நீக்கம் செய்தது அ.தி.மு.க. அரசு. அதன் காரணமாக 13 ஆயிரம் குடும்பங்கள் வீதியில் நிறுத்தப்பட்டன.

தி.மு.க. ஆட்சிக்கு வரும் நிலையில் முதல் கையொப்பம் மதுவிலக்கு என்று கருணாநிதி கூறியிருக்கிறார். 

அவர் ஒன்றைச் சொன்னால், அதனை நிறைவேற்றுவதிலும் நாணயம் தவறாதவர் என்பதால் கருணாநிதி கூற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. 
தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான இடம் அளித்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. ஆனால் தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது ஓர் ஆவணமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
Privacy and cookie settings