நடிகராக இருந்தும் நடிக்கத்தெரியாத அரசியல் தலைவர் !

எனக்கு என் பொண்டாட்டிக்கும் கொஞ்சூண்டு பழைய சோறும் பச்சை வெங்காயமும் போதும்... என்று காஞ்சிபுரம் மாநாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளந்தியாக பேச... கூட்டத்தில் கை தட்டலும் விசிலும் பறக்கிறது.
விஜயகாந்த் என்றாலே கோபத்தில் கண்கள் சிவக்க நாக்கை துருத்தி அடிக்கப் பாய்வதும், யாருக்குமே புரியாத மாதிரி பேசுவது தான் இன்றைக்கு பலரது நினைவுக்கு வரும். ஆனால் விஜயராஜாக இருந்து விஜயகாந்தாக மாறிய அவரது வாழ்க்கைப் பயணத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

மதுரை திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் பிறந்த விஜயராஜ், திரைத்துறை மீது ஏற்பட்ட ஈர்ப்பால் 10ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி மில்லை கவனிக்கத் தொடங்கினார். 

ஆனாலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை, அரவை மில்லில் அரைபடும் அரிசி போல மனதிற்குள் ஒரு மூலையில் இருந்து கொண்டேதான் இருந்தது.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

எங்க வீட்டுப் பிள்ளை' படத்தை 70 தடவைகள் மதுரை சென்ட்ரல் சினிமாவில் பார்த்தாராம் அடிக்கடி தனது நண்பர்களிடம் இந்த படத்தின் கதையை சீன் பை சீன் சொல்வாராம். 

1965ல் மதுரையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். இதுதான் அவர் பங்கேற்ற முதல் போராட்டம் என்கின்றனர் அவரை நன்கு அறிந்தவர்கள்.

விஜயகாந்த்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978ல் சென்னைக்கு பயணமான விஜயராஜ். ‘இனிக்கும் இளமை' படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

ரசிகர் மன்றம்

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் அப்போதே விஜயகாந்த் தென்னிந்திய ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டது. இன்றைய தேமுதிகவுக்கான விதை அதுதான். 1980ல் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் என்று பெயர் மாறியது. 

பின்னர், 1982ல், ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா' என்ற லட்சிய முழக்கத்துடன் தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம் என மன்றத்தின் பெயர் மாற்றப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்

எம்ஜிஆரின் உதவும் குணம், ரஜினியின் மேனரிசம் இரண்டையும் பிடித்துக்கொண்டு, அப்போது முதலே தனது ரசிகர் மன்றம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை வழங்க ஆரம்பித்தார்.

தமிழ் திரை உலகில் சாதனை

தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாக 1984ல் 'மதுரை சூரன்' முதல் 'ஜனவரி 1' படம் வரை 18 படங்களும் 1985ம் ஆண்டில் மட்டும் 'அலை ஓசை'யில் ஆரம்பித்து 'நானே ராஜா நானே மந்திரி' வரை 17 படங்களும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தச் சாதனை வேறு எந்த ஹீரோவும் செய்யாதது!

உண்ணாவிரதப் போராட்டம்

1984ம் ஆண்டில் தனது ரசிகர் மன்றத்தின் சார்பில் முதல் போராட்டத்தை நடத்தினார் விஜயகாந்த். அது, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்திய உண்ணாவிரதப் போராட்டம்.

இலவச மருத்துவமனை

1989ல் ரசிகர் மன்றம் சார்பில் ஈரோட்டில் இலவச மருத்துவமனையை திறந்துவைத்தார். இதையடுத்து சென்னை சாலிகிராமத்திலும் ஒரு இலவச மருத்துவமனை திறக்கப்பட்டது.

குலதெய்வம் கோவில்

விஜயகாந்த்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுப்பிக்க உதவியிருக்கிறார். சினிமாவோ, அரசியல் கூட்டணியோ எல்லாமே வீரசின்னம்மாவின் உத்தரவுப் படிதான் நடக்கும்.

தீவிர ஐயப்ப பக்தர்

ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக் கொண்டவுடன், இப்போது கோயிலுக்குச் செல்வது இல்லை!

பிரேமலதா உடன் திருமணம்

எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் 

1990ம் ஆண்டு தொழிலதிபர் எல்.சி.கண்ணையா- அம்சவேணி தம்பதியின் மகளான பிரேமலதாவை மணம் முடித்தார். இவர்களது திருமணத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதிதான் நடத்திவைத்தார்.

கேப்டன் பட்டம்

1991-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படம்தான் அவருக்கு ‘கேப்டன்' என்ற அடைமொழியைத் தந்தது. 

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை பிறந்தநாள் கொண்டாட மாட்டேன் என்று 1994ல் அறிவித்தார் விஜயகாந்த். தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் சூட்டினார். இரண்டாவது மகனுக்கு முருகன் பெயருடன் சேர்த்து சண்முக பாண்டியன் என்று வைத்தார்.
சிறந்த இந்திய குடிமகன்

1999 முதல் 2004 வரை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், நடிகர் சங்க கடனை அடைத்தார். 2001ல் சிறந்த இந்தியக் குடிமகன் விருதை விஜயகாந்துக்கு ஐ.நா. மனித உரிமைக் கமிஷனின் அப்போதைய தலைவர் பி.என்.பகவதி டெல்லியில் வழங்கினார்.

எம்.ஜி.அர் பிரச்சார வேன்

திருநாவுக்கரசு, ஜெயலலிதா, ஆர்.எம்.வீ. கேட்டும் தராத எம்.ஜி.ஆரின் பிரசார வேனை விஜயகாந்த்துக்குக் கொடுத்திருக்கிறார் ஜானகி எம்.ஜி.ஆர். அதோடு, எம்.ஜி.ஆர், ஜானகி எம்.ஜி.ஆர். எனப் பெயர் பொறித்த மோதிரங்களையும் விஜயகாந்த், பிரேமலதாவிற்கு வழங்கி மகிழ்ந்தார் திருமதி ஜானகி!

ரசிகர் மன்ற கொடி

தனது ரசிகர் மன்றத்துக்கான கருப்பு, சிவப்பு நிறத்தில் மத்தியில் மஞ்சள் நிற தீபம் கொண்ட கொடியை 2002ல் அறிமுகம் செய்தார். அதுதான் இன்றைக்கு தேமுதிக கொடியாகவும் தொடர்கிறது.

தேமுதிக உதயம்

1996 மற்றும் 2001 உள்ளாட்சித் தேர்தல்களில் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர் போட்டியிட்டனர். 500க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியும் பெற்றனர். 

இதுவும் கட்சி தொடங்கும் நிலைக்கு விஜயகாந்தை தள்ளியது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 2005ம் ஆண்டு ஆகஸ்ட்டில் தேமுதிகவை மதுரையில் முறைப்படி தொடங்கினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் அரசியலில் காலடி எடுத்து வைத்தனர்.

எம்.எல்.ஏ விஜயகாந்த்

2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளை எதிர்த்து தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, 8 சதவீத வாக்கு வங்கியைப் பெற்றது. விருதாச்சலம் எம்எல்ஏ ஆன விஜயகாந்த் முதன் முறையாக சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த்

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று நோக்கில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை கைப்பற்றியது தேமுதிக. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக உருவெடுத்தார்.

கூட்டணிக்கு காத்திருப்பு

2014ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, போட்டியிட்ட எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இப்போது சட்டசபை தேர்தலில் 
அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகளின் பலத்த எதிர்பார்ப்பாக தேமுதிக மாறியுள்ளது. திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என பல திசைகளில் இருந்தும் சிவப்புக் கம்பளம் விரித்து காத்திருக்கின்றனர்.

'கிங்' ஆவாரா விஜயகாந்த்

காஞ்சிபுரம் மாநாட்டில் நான் 'கிங்' ஆக இருக்க வேண்டுமா? 'கிங்' மேக்கராக இருக்க வேண்டுமா? என்று தொண்டர்களிடம் கேட்டார். இவரை 'கிங்' ஆக ஏற்றுக்கொள்ள ம.ந. கூட்டணி, பாதக தலைவர்களும் தயாராகவே இருக்கின்றனர். முடி சூடுவாரா விஜயகாந்த்?.
Tags:
Privacy and cookie settings