1,050 கி.மீ நடை பயணம், சாலையோர பிரசவம் - வடமாநில தொழிலாளியின் கதை !

சாலையோரம் குழந்தை பெற்றேடுத்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர், குழந்தையைப் பிரசவித்த பின்னரும் 150 கிலோ மீட்டர் தூரம் மீண்டும் நடந்தே சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
1,050 கி.மீ நடை பயணம், சாலையோர பிரசவம்

புலம்பெயர்ந்த தொழிலாளி சகுந்தலா மகாராஷ்டிராவில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு நடந்தே சென்று கொண்டு இருந்த போது பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்து இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் நடந்தே தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து தங்கள் சொந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள சத்னாவிற்கு சகுந்தலாவும் அவரது கணவர் ராகேஷ் கவுலும் நடத்தே சென்றுள்ளனர்.

நாசிக்கில் இருந்து சத்னா சுமார் 1050 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 'நடந்து சென்றுகொண்டிருந்த வழியிலேயே சகுந்தலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. 

சாலையோரம் ஒதுங்கியபடி குழந்தை பெற்றெடுத்து இரண்டு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் 150 கிலோ மீட்டர் நடந்து சென்றதாக,'' சகுந்தலாவின் கணவர் கூறுகிறார்.

ஆனால் தற்போது குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக சத்னாவில் உள்ள மருத்துவ அதிகாரி ஏ.கே. ரே கூறுகிறார்.

அதுமட்டுமின்றி மத்திய பிரதேச எல்லையில் உள்ள மருத்துவ குழு ஒன்று சகுந்தலாவையும் குழந்தையையும் பரிசோதித்து தேவையான உணவு அளித்து தற்போது வீட்டிற்கு அனுப்பியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
தற்போது வீட்டிற்கு சென்ற பிறகும் சகுந்தலாவும் குழந்தையும் தனிமைப் படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சகுந்தலா மற்றும் ராகேஷை போல பல புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags: