கின்னஸ் உலக சாதனை படைத்த தங்கச் சட்டை மனிதர் !

தங்கச் சட்டை மனிதர் என்று அழைக்கப்படும் மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற தொழில் அதிபரும் அரசியல்வாதியுமான பங்கஜ் பராக் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 
சுமார் 98,35,099 ரூபா செலவில் உலகின் மிக விலையுயர்ந்த தங்கச் சட்டை அணிந்தவர் என்று அவருக்கு கின்னஸ் உலக சாதனை புத்தகம் சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்தியாவின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 47 வயதான பங்கஜ், நாசிக் மாவட்டம் இயோலா நகர துணை மேயராக பதவி வகித்து வருகிறார்.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தனது 45 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு இந்த தங்கச்சட்டையினை அவர் தைத்தார். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இது மிகவும் சாதாரணமான விடயம். இவ்வாறு பெரிய அளவில் உலக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் மிகவும் சாதாரண மனிதனே நான்.

ஆனால் தற்போது கின்னஸ் சாதனை வரை என்னை கொண்டு சென்றமையை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சுமார் 4.10 கிலோகிராமுடைய இந்த தங்க சேர்ட் தற்போது சுமார் 13 மில்லியன் ரூபா பெறுமதியாகும்.

அத்துடன் இவ்ஆடையுடன் இணைந்ததாக தங்க கடிகாரம், சில தங்க சங்கிலிகள், மோதிரங்கள், தொலைபேசிக்கான கவர், மூக்குக் கண்ணாடி என அனைத்தினையும் உள்ளடக்கி சுமார் 10 கிலோகிராமாக கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாசிக் மாவட்டத்திலுள்ள பவ்னா தொழிற்சாலையில் இவ் ஆடை அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளதுடன் மும்பையிலுள்ள ஷாந்தி அலங்கார நிலையம் அனுசரணை வழங்கியுள்ளது.
Tags: