பெண் என்றால் 'மனைவி' மட்டும் தானா?

த்தீஸ்கர் மாநில பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், 'பொருளாதார பிரச்னைகள் மற்றும் சவால்கள்'  என்ற தலைப்பிலான பாடத்தில்,  "சுதந்திரத்திற்கு

பிறகு பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றச் செல்வதே வேலையில்லா திண்டாட்டத்திற்கு காரணம்" என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது.

இதனை சவுமியா கார்க் என்ற இளம்பெண் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, இவ்விவகாரம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய பெண்ணிய செயற்பாட்டாளர் முனைவர் சுந்தரவள்ளி, “ பெண்கள் பொருளாதார ரீதியாக விடுதலையடைவதையே பெண் இனத்திற்காக போராடிய தலைவர்களின் விரும்பினர்.

ஆனால் நிலைமையோ தலைகீழ். பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை பெண்கள் அடைந்துவிட்டதாக சொன்னாலும், வேலைக்கு போகிற பல பெண்களின் ஏ.டி.எம் கார்டுகள் கணவன்மார்களிடத்தில்தான் இருக்கிறது.

ஒரு அமைச்சரின் மேற்பார்வையில், கல்வித் துறை வெளியிட்ட புத்தகத்தில் வெளிப்படையாக பெண்களை இழிவு படுத்தும் வாசகங்கள் அச்சிடப்படுகிறது என்றால் அதற்குப் பின்னாலிருக்கும் அரசியலை மிகவும் நுட்பமாக பார்க்க வேண்டியுள்ளது.
 
2013ல் உத்தரகாண்ட் முதலமைச்சர் விஜய் பகுகுணா, ' பெண்களே... இரவு நேரத்தில் வேலைக்கு போகாதீங்க, அது உங்களுக்கு ஆபத்தை உருவாக்கும்!' என்றார்.

இன்னொரு இடத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கமற் றவர்கள் என்று சாமியார்கள் சொல்கிறார்கள். 

சில நாட்களுக்கு முன் திருப்பதி தேவஸ்தானம் கூட,  ஆண்கள் துணை யில்லாமல் பெண்கள் கோவிலுக்கு வராதீர்கள் என்று சொல்லியிருக்கிறது.

சமீபத்தில் பி.ஜே.பி மத்திய அமைச்சர் ஒருவர்,  'பெண்கள் வீட்டை விட்டு வெளியவே வரக்கூடாது. இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது' என்று சொல்லியிருக்கிறார். 

இதெல்லாம் மிகவும் பிற்போக்குத் தனமான விஷயங்களாகவே இருக்கிறது.சிந்தித்துப் பார்த்தால் பெண்கள் வெளிய வரக்கூடாது என்பதில் இவர்கள் அனைவரும் கவனமாக இருக்கிறார்கள் என்பது புரியும்.

பெண் விடுதலை என்பது ஒரு ஆணுக்கான தளத்தில், ஒரு ஆணுக்கு உரிய உரிமைகள் என்று என்னென்ன இருக்கிறதோ, அவை அத்தனையும் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே.

பெண்களுக்கான சுதந்திரம் ரொம்பவே முக்கியம். நினைத்த பாடத்தை படிக்க முடியாது. நினைத்த உடனே வேலைக்கு போக முடியாது. வெளியூர்களில் படிக்கவோ, வேலையோ பார்க்க முடியாது. 

குறிப்பிட்ட வேலைகளை பெண்களுக்கான வேலை என்று பிரித்து வைத்திருப்பார்கள். அந்த வேலைகள் மட்டுமே பெண்கள் பார்க்கமுடியும். அதுவும் மாலைக்குள் வீடு திரும்பி விட வேண்டும்.
தங்களுக்கு பிடித்தமான ஆடையை கூட தேர்வு செய்ய முடியாது. பெண்கள் என்றால் பார்க்க அழகாக, தன் உடலை கட்டுக் கோப்பாக, அதாவது ஒல்லியாகத் தான் இருக்க வேண்டும் என கற்பித்து விட்டதால், உணவை தேர்வு செய்கிற உரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.

எந்தப் பெண் விடுதலையோடு இருக்கிறாளோ அந்தப் பெண் தான் தன்னுடைய சந்ததிக்கு விடுதலையை சொல்லித் தர முடியும்.  அடிமையாக இருக்கும் ஒரு பெண் தன் சந்ததிக்கும், சமூகத்திற்கும் விடுதலை பற்றி சொல்லிக் கொடுக்க முடியாது.

பெண்கள் வேலை செய்து கிடைக்கிற வருமானம்தான் குடும்பங்களை சென்று சேருகிறது. இதனை அறியாமல், 'பெண்கள்தான் எல்லா இடங்களிலும் வேலைக்குச் செல்கிறார்கள் 'என்று புலம்பித்தள்ளுகிறார்கள். 

இந்தியாவை பொறுத்தவரை 6 சதவீதம் பெண்கள் மட்டும்தான் உயர்கல்வி படிக்கின்றனர். இந்த ஒரு சின்ன முன்னேற்றம் ஆதிக்க வர்க்கத்தினருக்கு உறுத்தலாக இருக்கிறது.

மீண்டும் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்கவே கலாச்சாரம் என்ற ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள் இவர்கள். பண்பாட்டின் உச்சம் பெண்கள்தான் என்கிறார்கள்.

ஆண் தண்ணியடித்தால் அது தவறு என்று ஒதுங்கிக் கொள்ளும் சமூகம், எங்கேனும் ஒரு பெண் தண்ணியடித்ததாக தகவல் வெளியானால் கலாச்சார சீர்கேடு என்று வெம்புகின்றனர்.

பொதுவாக சமூக மாற்றத்திற்கு கல்வி மிகவும் முக்கியம்; ஏனென்றால் கல்விதான் ஒருவருக்கு சிந்திக்கிற மனநிலையை தருகிறது. இன்றைய சூழலில் படித்தவர்கள் அப்படியில்லை. 

அதனால்தான் ஆண்டாண்டு காலமாக பாடப்புத்தகங்களில் பெண்களைப்பற்றிய தவறான கண்ணோட்டங்களே  பதிவு செய்யப்படுகின்றன.

இன்றும் கூட ஒண்ணாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ஒரு குடும்பத்தை அடையாளப்படுத்தும் படத்தில் அம்மா சமையல் வேலையில் ஈடுபட்டிருப்பார். அப்பா பேப்பர் படிப்பார். 

அண்ணன் விளையாடிக்கொண்டிருப்பான். தங்கை வீட்டு வேலைகளில் உதவி செய்துகொண்டிருப்பார். நான் படிக்கும் காலத்திலிருந்து இன்று வரை இதுதான் வழக்கமான ஒரு படமாக இருந்து வருகிறது.
ஆனால் முன்பாவது அதில் அம்மாவுக்கென்று ஒரு பெயர் இருந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கும் பாடத்திலோ மிஸஸ்.சர்மா என்றிருக்கும். 

பெண் என்றால் அவள் யாரோ ஒருவருடைய மனைவி. இவருடைய வேலை சமைப்பதும் வீடுகளை பராமரிப்பதும்தான் என்பதை மறைமுகமாக குழந்தைகளின் மனதில் பதிய வைக்க முயற்சிக்கிறது இந்த பாடம்.

ஒவ்வொரு அரசும் பாடத்திட்டங்களை முறைப்படுத்த ஒரு குழுவை வைத்திருக்கிறது. அந்தக் குழுவில் பெரும்பாலும் கல்வியாளர்கள் இருப்பதில்லை. கட்சி ஆதரவாளர்கள்தான் இருப்பார்கள்.

அப்படியில்லாமல் கல்வியாளர்களை தவிர்த்து வேறு யாரும் பாடத்திட்டம் தயாரிக்கக்கூடாது. பாடத்திட்டத்தை உருவாக்குகிறவர்கள்  சமூக மாற்றத்தை நேசிக்கிற மனிதர்களாக இருக்க வேண்டும்.

அரசியல் என்றால் என்ன, அரசு என்றால் என்ன, அரசும் அரசியலும் மக்களுக்கு எப்படி பயன்படும் என்று மாணவர்களுக்கு புரிய வேண்டும். கல்விதான் சமூக முன்னேற்றத்தை, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்.
 
அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது வரை இந்த ஆணாதிக்க குரல்கள் நம் செவிகளில் விழாது பார்த்துக் கொள்ள வேண்டும்... ந.ஆஷிகா
Tags:
Privacy and cookie settings