கைகளில் வளரும் கிருமிகள்.. எச்சரிக்கை !

''கை கழுவிச் சாப்பிடக் கிளம்புகையில் எதிரே வரும் நண்பர் நம்மைக் கை குலுக்கி நலம் விசாரிக்கும் தருணம்!'' - வாசகர் ஒருவரின் கேள்விக்கு வைரமுத்து சொன்ன பதில் இது.


கை குலுக்கும்போது அதன் வழியாக அசுத்தமும் தொற்றும் பரவ நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன. 'ஐயா’ திரைப் படத்தில் கை குலுக்குவதால் எத்தகைய முகச் சுளிப்பு ஏற்படும் என்பதை விலாவரியாக எடுத்துச் சொல்வார் வடிவேலு. 

எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் கதாநாயகி, கண்ணியம் மிக்க கதா நாயகனுடன் அறிமுகம் ஆகும் போது கைகுலுக்கக் கை நீட்டுவார். கதாநாயகன் நாசூக்காக மறுத்து விட்டு, 'வணக்கம்’ என்று கை குவிப்பார்.

நண்பர்களைச் சந்திக்கும் போது கை குலுக்கிக் கொள்வது மேலைநாட்டில் இருந்து இறக்குமதி யான வழக்கம். ஒருவர் கரங்களில் இருந்து கிருமிகள் அடுத்தவருக்குப் பரவ இது வகை செய்கிறது. 

கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்வது எந்த அளவுக்கு அவசியமானது என்பதுபற்றி விளக்குகிறார் சென்னை மருத்துவக் கல்லூரி தோல் சிகிச்சைப் பிரிவு கூடுதல் பேராசிரியர் வி.சம்பத். 

'தூய்மை இல்லாத கைகளால் என்ன வகையான நோய்கள் அதிகமாகப் பரவுகின்றன?' 

''பெரியவர் களுக்கு காலரா மற்றும் வயிற்றுப் போக்கு தொடர்பான வியாதிகள், டைஃபாய்டு போன்ற நோய்கள் சுகாதாரம் இல்லாத கைகள் மூலம் பரவும்.

குழந்தை களுக்கு மேற்சொன்ன வற்றுடன் கொப்புளங்கள் மற்றும் சீழ்க்கட்டிகள் ஆகியவை பரவும். வைரஸால் தோன்றிய மருக்களைத் தொட்ட கைகளால்


மற்றவரைத் தொட்டாலோ அல்லது மருக்கள் உள்ளவரே தனது உடலில் பிற இடங்களில் தொட்டாலோ மருக்கள் பரவும் சாத்தியம் இருக்கிறது.''

'எப்போதெல்லாம் கை கழுவுவது அவசியம்?' 

'நாள்தோறும் நம் கைகள் பலரையும் தொடுகின்றன. பல பொருட்களையும் தொடுகின்றன. இதன் மூலம் ஏராளமான கிருமிகள் நம் கைகளில் சேருகின்றன. இவை கண்ணுக்குத் தெரியாது.

அதே கைகளைக் கொண்டு நமது கண்கள், மூக்கு மற்றும் வாய் போன்ற பகுதிகளைத் தொடும் போது நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கிருமிகளே இல்லாதபடி கைகளைப் பாதுகாப்பது இயலாது என்றாலும், அடிக்கடி கை கழுவும் பழக்கம் நுண்ணுயிர்க் கிருமி களைக் குறைக்கக் கை கொடுக்கும்.

உணவு தயாரிப்பதற்கு முன்னரும் சாப்பிடுவதற்கு முன்னரும்; காயங்களுக்கு மருந்து போடுவதற்கு முன்னரும்;

மருந்துகள் எடுத்துக்கொள்வதற்கு முன்னரும்; நோயுற்றவருக்குப் பணிவிடை செய்வதற்கு முன்னரும்; கான்டாக்ட் லென்ஸ் பொருத்துவதற்கு முன்னரும்; கழற்றுவதற்கு முன்னரும் அவசியம் கை கழுவ வேண்டும். 

உணவு சமைத்ததற்குப் பின்னர் - குறிப்பாக மாமிச வகைகளைத் தொட்ட பிறகு, கழிப்பறைக்குச் சென்று வந்த பிறகு, டயப்பர்களை மாற்றிய பிறகு, மூக்குச் சிந்திய பிறகு, கைகளால் மறைத்துக் கொண்டு தும்மிய பிறகும் 


இருமிய பிறகும், காயங்களுக்கு மருந்து போட்ட பின்னர், நோயுற்ற வருக்குப் பணிவிடை செய்ததற்குப் பின்னர், விலங்குகள், அவை உணவு உண்ணும் பாத்திரங்கள், சங்கிலி, கழுத்துப் பட்டை போன்றவ ற்றைத் தொடும்போது,

அவற்றின் கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது, குப்பைகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகள், காலணிகள் போன்ற வற்றைத் தொட்ட பிறகு கை கழுவுவது மிகவும் அவசியம்.'

'எப்படிக் கை கழுவ வேண்டும்?' 

'கைகளைக் கழுவத் தண்ணீர் மட்டுமே போதாது. கொழுப்புகளும் கொழுப்பு அமிலங்களும் தண்ணீரில் கரையாது. எனவே, சோப்புக் கரைசலால் கழுவுவது நல்லது.

குழாயில் இருந்து கொட்டும் நீரில் நன்றாகக் கைகளை நனையுங்கள். பின்னர் சோப்புக் கட்டி அல்லது சோப்புத் திரவம் / தூளைப் பயன்படுத்தி நன்கு நுரை வரத் தேயுங்கள். கையின் பின்புறம்,

விரல்களுக்கு இடையில் நகங்களுக்குக் கீழே மற்றும் மணிக்கட்டு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் தேயுங்கள். பின்னர் கைகளை நன்றாக நீரில் அலசுங்கள்.


சோப் இல்லாத தருணங்களில் அதி வேகமாகக் கைகளை உரசிக் கழுவுவதன் மூலம் கிருமிகளைப் போக்கிக் கொள்ளலாம்.

வெறும் கையால் குழாயை மூடுவதற்குப் பதிலாகக் கையில் துண்டு ஒன்றை எடுத்து அதன் மூலம் குழாயை மூடுங்கள். கைகளில் ஈரம் போகச் சுத்தமாகத் துடைத்து விடுங்கள்.

ஈரத்தைப் போக்குவதற்கு 'ஜெட் ஏர் ட்ரையர்’கள் கை கழுவும் இடங்களில் பொருத்தப் பட்டு உள்ளன. இவற்றைப் பயன் படுத்தினால் இரண்டு மீட்டர் தொலைவில் உள்ளவர் களுக்கும் கூடக் கிருமிகள்

ஊதித் தள்ளப்படுவதாக லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

எனவே, டிஷ்யூ பேப்பர் மூலம் கை துடைப்பதே பாதுகாப்பானது. உலர்ந்த சுத்தமான டவலைப் பயன்படுத்தியும் கைகளைச் சுத்தப் படுத்தலாம்!'
Tags: