கொள்ளையர்கள் கைவரிசை... எதுவும் கிடைக்காததால் வீட்டிற்கு தீவைப்பு !

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். 
மகள்களை பார்ப்பதற்காக நேற்றிரவு ராஜேஸ்வரி கோவை சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ராஜேஸ்வரி வீட்டில் இருந்து புகை வருவதை கண்ட அருகில் இருந்தவர்கள் மேற்கு காவல் நிலையத்திற்கும்,

தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். 

இருப்பினும் வீட்டில் இருந்த துணி, சமையல் பொருள்கள், கல்வி சான்றிதழ்கள், ஏ.டி.எம்.கார்டு உள்ளிட்டவை முற்றிலும் எரிந்து நாசமானது.

வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பொருள்கள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் 

ஒரு எல்.இ.டி. டி.வி.யை மட்டும் திருடிச் சென்றுவிட்டு ஆத்திரத்தில் வீட்டில் தீ வைத்து விட்டு தப்பிச்சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்ற வீடு அருகே வசித்து வரும் வேல்சாமி என்பவரது மனைவி சுப்புலெட்சுமி என்பவர் நேற்று இரவு மாடியில் உறங்கியுள்ளார். அவர் பக்கத்தில் வைத்திருந்த செல்போனையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இதேப்போன்று கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் விசுவநாதன் நகரைச் சேர்ந்தவர் சுதர்சனம். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். 

இவரது மனைவி சித்ரா (31) மற்றும் குழந்தைகள் இங்கு வசித்து வருகின்றனர். சித்ரா தனது குழந்தைகளுடன் நேற்று பெருமாள்பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. 

இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின்பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 4கிராம் மதிப்புள்ள தங்க கம்மல்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஒரு கேமரா ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இதே போன்று நாலாட்டின் புதூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் ஆசைத்தம்பி. இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி வள்ளியம்மாள்(45) மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர். 

நேற்று உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் வள்ளியம்மாள் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதாக தெரிகிறது.

இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் 4 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள், 1 லட்ச ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

கோவில்பட்டி பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்கள் காரணமாக பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
Tags: