ஜெ.வை சிரிக்க வைத்த பெண் தொண்டர் !

தங்கத்தாரகை.... புரட்சித்தலைவி... தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்... இது என்ன என்று பார்க்கிறீர்களா? போயஸ் கார்டனில் நேர்காணலுக்குச் சென்ற 
அதிமுக பெண் தொண்டர் ஒருவர் ஜெயலலிதாவைப் பார்த்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்து சொன்ன வார்த்தைகள்தான். இதைக் கேட்ட ஜெயலலிதா,

அந்த பெண் தொண்டரின் நடவடிக்கைகள், பேச்சினைப் பார்த்துதான் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். 

சட்டசபைத் தேர்தல் மே 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சியினர் பிசியாக ஈடுபட்டுள்ளனர். 

ஆளுக்கு முதலாய் விருப்பமனு வாங்கிய அதிமுக இப்போது வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலை பிசியாக செய்து வருகிறது.  போயஸ்கார்டனில் ஜெயலலிதாவே நேர்காணலை நடத்துவதால், ஏதோ கோவில் கருவறைக்குள் செல்வது போல பய பக்தியோடு செல்கின்றனர்.

நேர்காணலுக்குச் செல்லும் பெண் வேட்பாளர்கள் பச்சை நிற புடவையைத்தான் அதிகம் உபயோகிக்கின்றனர். பச்சைக்கலர் கிளாஸ் பைல். அதில் பெரிய அம்மா படம் என்று கலக்கலாக போயஸ் கார்டனுக்குள் நுழைகின்றனர்.

நேர்காணலுக்கு வரும் ஆண் வேட்பாளர்கள் கஞ்சி போட்டு அயர்ன் செய்த தும்பைப் பூ வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் வலம் வருகின்றனர். பாக்கெட்டில் அம்மா படம்... பைலில் நடு நாயகமாக அம்மா படம் என அம்மா மயமாக வேதா நிலையத்திற்குள் நுழைகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர் சட்டசபை தொகுதிகளை தவிர மீதமுள்ள சட்டசபை தொகுதிகளில் தொகுதிக்கு 3 பேர் வீதம் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்பட சட்டசபை தொகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்தனர்.

நேர்காணலில் முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்வது என்று ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டசபை தொகுதியில் இருந்து மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திரபிரபா, மாவட்ட துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், சீனிவாசன் ஆகியோர் நேர்காணலுக்கு சென்றனர்.

மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திரபிரபா எம்.ஏ., தமிழ் முதுநிலைப்படிப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். அதிகம் படித்திருந்தாலும் கிராமத்து பெண்மணியான அவர் எப்போதும் வெகுளியாகவே பேசுவாராம்.

முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவரது கணவர் முத்தையா தனியாக 2 நாள் டிரெயினிங் கொடுத்திருந்தாராம். அதை மனதில் ஏற்றிக்கொண்டார் சந்திர பிரபா.

போயஸ் கார்டனனில் உள்ள வேதா நிலையத்திற்குள் நுழைந்த சந்திர பிரபா, நேர்காணல் நடந்த அறைக்குள் நுழைந்ததும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில் நெடுஞ்சான் கிடையாக காலில் விழுந்து எழுந்ததோடு குனிந்து கொண்டே நின்றாராம்.

சீட்டுல உட்காருங்க என்று ஜெயலலிதா சொன்னதற்கு 'இல்லம்மா' என்று சொல்லி விட்டு...திடீரென "தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்"என்று பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல் புகழத்தொடங்கி விட்டாராம்.

மனப்பாடம் செய்து ஓப்பிப்பது போல் சந்திர பிரபா கூறியதை கேட்ட ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம். அவரே ஒரு கட்டத்தில் போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை..
முதல்ல உட்காருங்க...என்று சொன்ன பிறகே நிறுத்தி விட்டு சீட்டில் அமர்ந்தாராம் சந்திர பிரபா.

என்ன படிச்சிருக்கீங்க என்றாராம். தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு சொல்லவும் அப்படியா என்பதுபோல் பார்த்த ஜெயலலிதா மீண்டும் வாய் விட்டு சிரித்து விட்டு சரி போய் வா... ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்து என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.

அதிமுகவினரின் ஸ்டைலே அந்த குனிந்த கும்பிடும்... நெடுஞ்சாண் கிடை வழிபாடும்தான். அதை ஃபாலோ செய்து ஜெயலலிதாவை சிரிக்க வைத்துள்ளார் அந்த பெண் தொண்டர். அப்போ அவருக்கு சீட் கன்பார்ம்தான் போல.
Tags:
Privacy and cookie settings