வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை !

மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மழையால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை. 

6 மணிக்கு முன்பு வருபவர்களுக்கு டோக்கன் அளித்து அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படும். தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 

சென்னையில் சில பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் உள்ள பெண் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்றார்.

மழை காரணமாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்குமாறு முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான டி.ஆர். பாலு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார். 

மேலும் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கோரிக்கை விடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு லக்கானி சிரித்துக் கொண்டே கூறுகையில், 

எதிர்பார்க்கத் தான் நீங்கள் உள்ளீர்களே. வாக்குப்பதிவு முடிந்த பிறகு பதிவான வாக்குகளை வைத்து வாக்கு சதவீதத்தை அறிவிக்கவே நான் உள்ளேன் என்றார்.
Tags:
Privacy and cookie settings