வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த அரசு தடை!

வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது, பணி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. 
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பெரும்பாலான தனியார் பள்ளிகளும் கூட திறக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. அதில் மாணவர்கள் செல்போன்களை பள்ளிக் கூடத்திற்குக் கொண்டு வரக் கூடாது என்பது முக்கிய அறிவுறுத்தலாக இருந்தது. 

இந்த நிலையில் தற்போது ஆசிரியர்களுக்கும் செல்போன் பயன்பாட்டில் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. இதுதொடர்பாக அது விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளி வளாக தூய்மை, காற்றோட்டத்துடன் சுத்தமான வகுப்பறை, பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடங்கள், கருப்பு வண்ணம் பூசப்பட்ட கரும்பலகைகள் தயாராக இருக்கவேண்டும். 
வகுப்பறை மின் விசிறி, மின்விளக்குகள் நல்ல நிலையில் இயங்க வேண்டும். பள்ளி மேற்கூரை தூய்மையாகவும் இருக்க வேண்டும். குடிநீர் தொட்டியை, பிளீச்சிங் பவுடரால் சுத்தப்படுத்தியிருக்க வேண்டும். 

குழாய்களில் தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும். கழிப்பறை பராமரிப்பு சரியாக இருக்க வேண்டும். இதற்கான செலவினத்தை பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது பொது நிதியை பயன்படுத்தலாம்.

மாணவர் பதிவேடு, ஆசிரியர்களின் பதிவேடு, ஊழியர்கள் பதிவேடு ஆகியன முழுமையான விவரங்களுடன் தயாராக இருக்க வேண்டும். எழுதுபொருட்கள்,

மாணவர்களுக்கான இலவச புத்தங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்கள், பள்ளி துவங்குவதற்கு, 30 நிமிடம் முன்னதாகவே பள்ளிக்கு வந்து, பள்ளி சூழலை கண்காணிக்க வேண்டும். மாணவர் மத்தியில், நற்பண்புகளை விதைக்கும் வகையில், 

நீதி போதனை வகுப்புகளை ஓவ்வொரு வாரமும் நடத்த வேண்டும். இதன் மூலம், நல்ல கதைகள், கருத்துகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வாசிப்பு திறன், கையெழுத்து பயிற்சி, வாசிப்பு பயிற்சி, எழுத்து பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும். 
மாணவர்கள் மத்தியில் நூலக வாசிப்பு ஆர்வத்தை தூண்டுவது முக்கியம். தினசரி நாளிதழ்களை வாசிக்கச் செய்யவேண்டும். மாணவர்களை, மாலை நேரங்களில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.

எக்காரணம் கொண்டும், வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத நிலை கூடாது. விடுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக, மாற்று ஆசிரியர்கள் வகுப்புக்குச் சென்று கற்பிக்கவேண்டும். பணி நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல, மாணவர்களை அனுமதிக்கக் கூடாது.

தவிர்க்க முடியாத நேரத்தில், தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று, பதிவேட்டில் பதிவு செய்த பின்பே வெளியே செல்லவேண்டும். ஆசிரியர்கள், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings