விஜய்ன்னு அவருக்கு ஏன் பேர் வைச்சேன்?

டூரிங் டாக்கீஸ்’ல் ரொமான்ஸ் முகம் காட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர், ‘நையப்புடை’ டீஸரில் அதிரடி அதகளம் செய்தி ருக்கிறார். 
விஜய்ன்னு அவருக்கு ஏன் பேர் வைச்சேன்?
அத்தனை அட்ராசிட்டிக்கும் ‘திமிரு புடிச்சத் தமிழன்டா!’ என டீஸரிலேயே பதிலும் சொல்லியி ருக்கிறார். ‘ஏன் சார் இப்படி?’ எனக் கேட்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் அவரைச் சந்தித்தேன்.

”இந்தக் காலத்துல வேறவித ரசனை. வேறவித படைப்பு வருது. ‘நையப்புடை’யும் வேற… வேற மாதிரி! படத்தோட டைரக்டருக்கு 19 வயசு. எனக்கு 73 வயசு.

இதுவே எவ்ளோ இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு பார்த்தீங்களா?” என்று அமர்ந்தவர்தான், ஒவ்வொரு கேள்விக்கும் இறங்கி பதிலளித்தார்.

படத்துல எதை நையப் புடைக்கிறீங்க?
சமூகத்தின் மேல இருக்கிற கோபத்தைத் தான்! எல்லாருக்குமே இளைஞர்களுக்குத் தான் கோபம் வரும். வயசானவங்களுக்கு வராதுனு நினைப்பு.

வயசாயிட்டாலே, முடங்கிப் படுத்துடுவாங்கனு ஒரு கற்பனை. அதையெல்லாம் இந்தப் படம் உடைச்சு எறிஞ்சுடும். 

படம் முடிஞ்சு வெளியே வந்தா, ‘இந்தக் கெழவனுக்கே இவ்வளவு கோபம் வருதே, நமக்கு ஏன் இல்லை?’னு இளைஞர்களும், ‘இனிமே இந்தக் கெழவன் மாதிரி வாழணும்’னு வயசானவங்களும் யோசிப்பாங்க!

மு.க.ஸ்டாலினோட ‘கோபப்படுங்களு’க்கும் இதுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கா?

நான் ஸ்டாலினைப் பத்தி பேசலை தம்பி. என்னைப் பத்தி மட்டும்தான் பேசிக்கிட்டு இருக்கேன். சமூகத்துல நடக்குற தவறுகளைப் பார்த்து கோபப்படுங்கள்னுதான் நான் சொல்றேன்.
டீஸர்ல அத்தனை ஹீரோக்களையும் கலந்துகட்டுன மாதிரி வர்றீங்க. ஸ்பெஷலா யோசிச்சீங்களோ?

இப்பவும் என் மனசை இளமையாவே வெச்சிருக்கேன். 70 படம் இயக்கிட்டேன். இன்னைக்குப் பெரிய இடத்துல இருக்கிற பல ஹீரோக்களை அறிமுகப்படுத்தி யிருக்கேன். 

அவங்களுக் கெல்லாம்ம் நான்தானே நடிப்பு சொல்லிக் கொடுத்தேன். அப்பவே எனக்குள்ள ஒரு நடிகன் இருந்திருப்பான்ல… 

அந்த நடிகன் தான் இத்தனை வருஷம் கழிச்சு இப்போ வெளியே வந்திருக்கான்.

மத்தபடி, நான் பெருசா மெனக்கெடலை. ‘இப்படி ஒரு கேரக்டர்ல நீங்க நடிக்கணும்’னு சொன்னாங்க. அந்தக் கேரக்டராவே மாறிப்போய் ஷூட்டிங்ல நின்னேன். 

உங்களுக்குள்ள இருந்த நடிகர், இப்போ ஏன் வெளியே வரணும்? இதுக்கு முன்னாடியே வந்திருக்கலாமே?”

சினிமாவைக் காதலிச்சு வாழ்ந்தேன். இன்னும் காதலிச்சுக்கிட்டு தான் இருக்கேன். கல்யாணம் பண்ணிக்கலை. இனியும் காதலிச்சுக் கிட்டேதான் இருப்பேன்.
இப்ப வர்ற இளம் இயக்குனர்கள் சூப்பரா ஸ்கோர் பண்றாங்க. அவங்களுக்கு வழி விட்டுட்டு டைரக்‌ஷனை குளோஸ் பண்ணிக்கலாம்னு விடும் போது… 

என் காதலி என்னை விட மாட்டேங்கிறா! ‘நீ என்னைக் காதலிச்சுட்ட… நீ இல்லாம என்னால இருக்கமுடியலை… 

உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியலை!’னு திரும்பக் கூப்பிட்டா. அதே உருவத்துல போகாம, வேற உருவத்துல போலாமேனு நடிக்க வந்துட்டேன்!

ரொம்ப லவ் பண்றீங்களோ?

பின்னே? தம்பி… முன்ன எனக்குள்ள இருந்த வேகத்துல பாதிதான் இப்போ இருக்கு. நீங்கெல்லாம் இந்த ஜெனரேஷன் பசங்க. 

நான் டைரக்‌ஷன் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, பக்கத்துல ஒரு உதவி இயக்குனரும் வரமாட்டாங்க.

அவ்வளவு வேகம். யாராவது சீண்டுனாலே, தப்பா கேள்வி கேட்டாலோ அவ்வளவு தான்! அதனால, வேகத்தையும் கோபத்தையும் போட்டுக் குழப்பிக்காதீங்க. 

வயசுக்கும் கோபத்துக்கும், ஆர்வத்துக்கும், காதலுக்கும், வேகத்துக்கும் சம்பந்தமே கிடையாது.
‘தவறு நடக்கும் போது கோபப்படு. இல்லைனா, அதுவே பெரும் தவறு’னு சேகுவேரா சொல்லியிருக்கார். அது தான் ‘நையப்புடை’யில சொல்லி யிருக்கோம்.

ராணுவத்துல இருந்து ரிட்டயர்ட் ஆகி ஊருக்கு வர்ற ஒரு கெழவனுக்குள்ள இருக்கிற வேகம் தான் படத்தோட கதை.

என் தாத்தா மிலிட்டரியில் இருந்தவர். அவரை இன்ஸ்பிரேஷனா வெச்சு, என்னுடைய தாத்தாவாகவே நான் நடிச்சிருக்கேன் (?!). 
டைரக்டர் பேரும் விஜய், நடிச்சவரும் பா.விஜய்… ஏன்?

விஜய்னா வெற்றி… இந்தப் பெயர்மேல எனக்குப் பெரிய கிரேஸ் இருக்கு. 

என்னோட பெரும்பாலான படத்துல ஹீரோவோட பேரு விஜய்தான். மகனுக்கும் அந்தப் பெயர் வெச்சதுக்குக் காரணம் இதுதான்.

அடுத்த படத்துல உங்களுக்கு ஹீரோயினா நடிக்க ஒருத்தவங்க வேணும்னா, யாரைத் தேர்ந்தெடுப்பீங்க?

தீபிகா படுகோனே! (டி.ஆர்., பாணியில் சொல்கிறார்) ஏன்னா, அவங்ககிட்ட பெண்மை இருக்கிறது, அவங்ககிட்ட இளமை இருக்கிறது, அவங்ககிட்ட துடிப்பு இருக்கிறது, 

அவங்ககிட்ட கோபம் இருக்கிறது, அவங்ககிட்ட அழகு இருக்கிறது. முக்கியமா, அவங்ககிட்ட தனித் திறமை இருக்கிறது!
இப்படியெல்லாம் இருந்தா, நெட்டிசன்கள் பவர் ஸ்டார், சோலார் ஸ்டார் ரேஞ்சுக்கு ஆக்கிடுவாங்க. அந்தப் பயம் உங்களுக்கு இல்லையா?

விமர்சனத்துக்குப் பயந்தா வாழமுடியுமா? உயரே போய்க்கிட்டு இருக்கிறவங்கமேல அதிகமாவே விமர்சனம் வரும். 

இப்போ கார்ட்டூன் போடுறீங்களே… ரோட்டுல போறவனையா வரையிறீங்க. கலைஞர், ஜெயலலிதா, ரஜினி, விஜய்னு பெரிய பிரபலங்களைத் தானே வரையிறீங்க.

ஏன்? ஆனந்த விகடன் ‘லூஸூப்பையன்’ பகுதியிலேயே மாசத்துக்கு ரெண்டு தடவை நானும், 

விஜய்யும் இடம் பிடிக்கிறோம்னா, வளர்ந்துக்கிட்டு இருக்கோம்னு தான் அர்த்தம். அதுக்காக, நான் சந்தோஷப்படுறேன்!

‘நையப்புடை’ டீஸரைப் பார்த்துட்டு, பலபேர் மீம்ஸ் போட்டிருந்தாங்களே… கவனிச்சீங்களா?

பார்த்தேன்… பார்த்தேன். பலபேர் நல்லவிதமா சொல்றாங்க. சிலபேர் ‘இந்த வயசுல இதெல்லாம் தேவையா?’னு கேட்குறாங்க. ஏன் இப்படி இருக்காங்கனுதான் புரியலை. உணர்வுகளின் தொகுப்புதான் தம்பி மனிதன்.

சிலர், பாசமாக இருக்கலாம். சிலர், கோபமாக இருக்கலாம். சிலர், காதலாக இருக்கலாம். சிலர், அமைதியாக இருக்கலாம்.
இப்படிப் பல உணர்வுகள் இருக்கு. அதுக்கும் வயசுக்கும் முடிச்சு போடக்கூடாது. 

இதோ, இந்த வயசுலேயும் காலையில வாக்கிங் போறேன். யோகா பண்றேன். ராத்திரி 9 மணி வரைக்கும் வேலை பார்க்குறேன். டிரெய்லரைப் பார்த்தீங்களா…

படத்துல ரோப் கட்டாமலேயே சண்டை போட்டிருக்கேன். அதுக்குக் காரணம் எனக்குள்ள இருக்கிற வேகம், வெறி! ஹாலிவுட்ல பார்த்தீங்களா… 

பெரிய ஸ்டார் லெவல்ல இருக்கிறவங்க பூராவுமே 70 வயசுக்கு மேலே இருக்கிறவங்கதான். எங்களை மட்டும் ஏன் அப்பா, அண்ணன் கேரக்டருக்குச் சுருக்குறீங்க? 

எங்களுக்கு ஆசை இல்லையா? கோபம் இல்லையா? தாபம் இல்லையா? கடவுள் கொடுத்த வாழ்க்கையில கடைசி நொடி வரைக்கும் சந்தோஷமா செலவழிக்கணும்!

புலி’ படத்துக்கு டி.ஆர் பேச்சு செம பப்ளிசிட்டி. இந்தப் படத்துக்கு அப்படி எதுவும் பிளான் இருக்கா?

அது யதார்த்தமா நடந்தது. இந்தப் படத்துக்கு எந்தப் பிளானும் இல்லை. படத்துக்கே பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. 

ஆனா, நல்லா இருந்தா தான் ஓடும்! பத்திரிக்கைகள்னா கூட பரவாயில்லை. நீங்க டாட்.காம்ல இருக்கீங்க. 
பாதி படம் முடியும் போதே, ‘ஏன்டா உட்கார்ந்திருக்கீங்க? கெளம்புங்கடா’ ங்கிற ரீதியில வசனம் எழுதிப் போட்டுடுவீங்க. 

அதனால, இந்தப் படத்துக்கு முழு உழைப்பைக் கொடுத்திருக்கோம். மத்தபடி பப்ளிசிட்டிக்கு பாரதியாரே இருக்கார். 

அவர் ‘நையப்புடை’னு சொல்லலை… நைய்ய்ய்ய்ய்யப்ப் ப்புடைனு சொல்லியிருக்கார். அவரோட கோபத்தை நான் படத்துல கொட்டியிருக்கேன்.

– கே.ஜி.மணிகண்டன், படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்
Tags:
Privacy and cookie settings