கூட்டணி விஷயத்தில் நொந்து போயுள்ள தி.மு.க.,விற்கு, 'காங்கிரஸ் எப்படியும் நம்மோடு வருவார்கள்' என்ற சிந்தனை, ஆறுதலை அளித்து வந்தது.
ஆனால், இப்போது, காங்கிரசும் தி.மு.க.,வை கைவிடும் நிலை உருவாகி உள்ளது. இதற்கு காரணம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பற்றி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், 'சூடாகி' இருப்பது தானாம்.
'கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அணியில், காங்கிரஸ் - 63, பா.ம.க., - 30, விடுதலை சிறுத்தைகள் - 10 என, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது, பா.ம.க.,வும், விடுதலை சிறுத்தைகளும் கூட்டணியில் இல்லை. அதனால், காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத்,
'அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 40 தொகுதிகளை, 50:50 என்ற அடிப்படையில், ஆளுக்கு, 20 தொகுதிகளாக பிரித்துக் கொள்வோம். இது தவிர, கடந்த தேர்தலை போல் 63 தொகுதிகளையும் சேர்த்து, எங்களுக்கு, மொத்தம் 83 தொகுதிகள் ஒதுக்குங்கள்' என, தி.மு.க.,விடம் கேட்டுள்ளார்.
ஆனால், தி.மு.க., தரப்பில், '25 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்ய முடியும். நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நாங்கள் த.மா.கா.,வை அழைத்துக் கொள்வோம்' என, மறைமுகமான மிரட்டல் விடுக்கப்பட்டது.
குறைந்த தொகுதிகளை கூட காங்கிரஸ் பொறுத்துக் கொள்ளும்.தி.மு.க.,வின் கூட்டாளியாச்சே. ஆனால், த.மா.கா.,-வாசன் என்ற வார்த்தைகளை அந்த கட்சி துணை தலைவர் ராகுலால் சகிக்கக் கூட முடியாதாம்.
காங்கிரஸ் கட்சியில் இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி., பதவி, ஒரு முறை அகில இந்திய காங்கிரஸ் செயலர், இரண்டு முறை மத்திய அமைச்சர் பதவி என பல்வேறு பதவி சுகங்களை, வாசன் அனுபவித்து விட்டு, காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவிய நேரத்தில் கைவிட்டார் என்பது தான் ராகுலின் கோபத்திற்கு காரணம்.
அதனால், தி.மு.க.,- த.மா.கா.,வுடன் பேசுகிறது என்பதை அறிந்ததுமே, 'காங்கிரஸ் இடம் பெறும் கூட்டணியில் த.மா.கா.., இடம்பெறக் கூடாது. குறைந்த எண்ணிக்கை தொகுதிகளை பெற்று 'கை'யை சுட்டுக்கொள்வதை விட, 234 தொகுதிகளிலும் மானத்தோடு தனித்து போட்டியிடலாம்.
இதன்மூலம், காங்கிரஸ் கொடியை பட்டி தொட்டிகளில் பறக்க விடலாம்' என்று கூறியுள்ளார்.இந்த விஷயத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், அவருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
ஆனால், 'தி.மு.க., கூட்டணியுடன் கூடுதல் தொகுதிகள் கேட்டு வாங்குங்கள்' என மட்டும் காங்கிரஸ் தலைவர் சோனியா, குலாம்நபி ஆசாத்துக்கு அறிவுறுத்தி உள்ளார்.'நெட்டையோ, குட்டையோ', கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திப்பதில், அவருக்கு விருப்பம் இல்லை.
அதேபோல் தான், காங்கிரசின் தமிழக தலைவர் இளங்கோவனும், தி.மு.க., வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இதில் யார் கை ஓங்கும் என, விரைவில் தெரியும்.
இதற்கிடையில், தி.மு.க., - த.மா.கா., இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல் உலவுகிறது. த.மா.கா., 23 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டும் கேட்டுள்ளதாம்.
தற்போதைய நிலையில், பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. காரணம், வாசனின் முதல் தேர்வு அ.தி.மு.க., கூட்டணி தான். அங்கிருந்து பச்சைக்கொடி காட்டுவார்களா என்று வாசன் காத்திருக்கிறார்.