நகரும் மாடிவீடு - கட்டிடத்துறையில் சாதித்த சாஹுல்!

கீழக்கரை அருகே  சேதுக்கரை ஊராட்சி மேலப்புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் எஸ் எம் சாஹுல் ஹமீது. இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் கட்டிடங்களுக்கான கான்கிரீட் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றியவர்.

 

இவர் புதுமை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நிற்காமல் கடும் முயற்சியில் அஸ்திவாரமே இல்லாமல் நகரும் மாடி வீட்டை உருவாக்கி இருக்கிறார்.

இது குறித்து சாஹுல் ஹமீது கூறுகையில் கடந்த 22 வருடங்களாக கட்டிடங்களுக்கு கான்கிரீட் பம்ப் ஆப்பரேட்டராக துபாய் மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளேன். ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன்.

குஜராத், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் பேரழிவுகளால் உருக்குலைந்த வீடுகளை கண்ட எனக்கு அஸ்திவாரம் இல்லாத  பவுண்டேசன்) மாடி வீட்டினை உருவாக்க வேண்டும் என்ற எண்ண‌ம் தோன்றியது.

பொதுவாக ஒரு மாடி வீடு கட்ட வேண்டுமென்றால் 6 அடி ஆழத்தில் அஸ்திவாரம் தோண்டப்பட்டு அதிலிருந்து கட்டடம் எழுப்பப்படும்  நான் எழுப்பியுள்ள மாடி வீட்டின் கட்டிட‌த்தில் தரைதளத்தில் இருந்து 36 க்கு 30 சதுர அடி அளவில் 1 மீட்டர் உயரத்தில் கான்கிரிட் மேடை தளம் அமைத்து  அதன் மேல் 12 தூண்கள் எழுப்பி 10 அடி உயரமும் மேலதளம் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பெட்ரூம் 1 ஹால் வரவேற்பரை சமையலறை உள்ளிட்ட வசதிகளுடன் 20 லட்சம் செலவானது. சாதாரண கட்டுமான வீடுகளுக்கு ரூ 32 லட்சம் வரை செலவாகும்.வருடம் ஒருமுறை பெயிண்டிங் செய்து பராமரிக்கிறேன்.

இதன் சிறப்பம்சம்  கட்டிடத்தின் தரையில் இருந்து 1 மீட்டருக்கு பின் அடிப்பகுதியில் தொழில்நுட்ப உதவியுடன் சுழலும் உருளை சிலிண்டர்கள் மூலம் 360 டிகிரியில் திருப்பி வைத்து கொள்ளலாம்.

தேவைப்பட்டால் பல அடி தூரம் வரை வீட்டை தள்ளி வைத்து கொள்ளலாம் சோதனை  முயற்சியான கட்டிடத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை எனது அனுபவ அறிவால் உணர்கிறேன். பலர் என்னை கேலியும் கிண்டலும் செய்தாலும் அதை நான் பொருட்படுத்தவில்லை.

கட்டிட கலையில் இது ஒரு புதிய முயற்சி,  இந்த வீடு பூகம்பத்தில் சேதமாகமல் இருக்கும் என நான் கருதுகிறேன் என்றார். சேதுக்கரை அருகே கடந்த  2009ம் ஆண்டு இந்த வீடு கட்டி முடித்திருக்கிறார்  சேதுக்கரை கொட்டக்குடி ஆற்றின் அருகில் சதுப்புநில தரையால் சூழப்பட்டுள்ளது.
Tags: