கழிவுநீர் ஓடைக்குள் புகுந்த மனநோயாளி !

குழித்துறை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க நபர் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார்.
சிறிது நேரத்திற்கு பின் திடீரென அவர் தியேட்டர் முன் உள்ள கழிவுநீர் ஓடையில் தண்ணீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த திறப்பின் வழியாக உள்ளே புகுந்தார். அப்போது அவரது கால் மட்டும் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிலர்,ஏன் இவ்வாறு செய்கிறாய்?என அவரிடம் கேட்டனர். உடனே அந்த நபர் காலை உள்ளே இழுத்துக் கொண்டு ஓடைக்குள் சென்றுவிட்டார்.

இதையடுத்து பொதுமக்கள் அந்த நபரை வெளியே வரும்படி கூறினர். அவர் வராததால் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு வீரர்கள் வந்து வெளியே அழைத்த போதும் அவர் வரவில்லை.

தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் பேசியும் எந்த பதிலும் வரவில்லை. தீயணைப்பு வீரர்கள் உள்ளே லைட் வெளிச்சத்தில் பார்த்த போது அந்தநபர் ஓடை வழியாக தவழ்ந்து சென்றுக்கொண்டிருந்தார்.

அவரை பிடிப்பதற்காக வீரர்கள் ஓடையின் மறுபுறம் காத்து நின்றனர். இதை கவனித்த அந்தநபர் ஓடைக்குள்ளேயே திரும்பி மீண்டும் வந்த வழியாக தவழ்ந்து கொண்டிருந்தார். 

இதனால் அவரை வெளியே கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் கடும் சிரமப்பட்டனர். சுமார் 1மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்களும், பொதுமக்களும் சேர்ந்து கழிவு நீரோடை காங்கிரீட்டை கட்டர் மெஷின் பயன்படுத்தி உடைத்து அவரை வெளியே கொண்டு வந்தனர்.

வெளியே வந்த பின்னரும் அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இதனால் அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் அறிய முடியவில்லை.

 மனநோயாளி போல் தென்பட்ட அவரை சமூகஆர்வலர் ராஜகோபால் உள்பட பொதுமக்கள் சிலர் சுத்தம் செய்து, சவரம் செய்து குளிப்பாட்டி காப்பகத்தில் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டனர்.

இதையடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிய அவரை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழித்துறை அரசு மருத்துவமனை சென்ற போது திடீரென ஆம்புலன்சில் இருந்து அவர் இறங்கி ஓடினார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் துரத்திசென்றும் அவர்களால் அவரை பிடிக்க முடியவில்லை. மனநோயாளி என கருதப்பட்டவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்சில் இருந்து இறங்கி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:
Privacy and cookie settings