ஐஎஸ்எல் வீரர்கள் ஏலம்: சுனில் சேத்ரியை ரூ.1.20 கோடிக்கு வாங்கியது மும்பை!

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர முன்கள வீரருமான சுனில் சேத்ரியை ரூ.1.30 கோடிக்கு மும்பை சிட்டி எப்.சி. அணி வாங்கியுள்ளது.
சுனில் சேத்ரி
இந்திய வீரர்களில் சுனில் சேத்ரிதான் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 2-வது சீசன் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 10 இந்திய வீரர்களுக்கான ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. 

இதில் சுனில் சேத்ரிக்கு அடிப்படை விலையாக ரூ.80 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சுனில் சேத்ரியை வாங்க எல்லா அணிகளும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அவருடைய பெயர் ஏலத்தில் வந்தபோது மும்பையும், டெல்லியும் மட்டுமே போட்டி போட்டன. இறுதியில் அவரை ரூ.1.20 கோடிக்கு வாங்கியது மும்பை. சுனித் சேத்ரி மிக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில்,

அடிப்படை விலையைவிட கூடுதலாக ரூ.40 லட்சத்துக்கு மட்டுமே அவர் விலைபோனது ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் கடந்த ஐ-லீக் சீசனில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடிய மத்திய நடுகள வீரர் யூஜெனிசன் லிங்டோ

தனது அடிப்படை விலையைவிட (ரூ.27.5 லட்சம்) 3 மடங்கு அதிகமாக ரூ.1.05 கோடிக்கு புனே சிட்டி அணியால் வாங்கப்பட்டது ஆச்சர்யமாக அமைந்தது. அவரை வாங்குவதற்காக கோவா, கேரளா, நார்த் ஈஸ்ட், கொல்கத்தா, மும்பை, புனே ஆகிய 6 அணிகள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் பின்கள வீரரான ரினோ ஆண்டோவை ரூ.90 லட்சத்துக்கு வாங்கியது அட்லெடிகோ டி கொல்கத்தா அணி. இது அவருடைய அடிப்படை விலையைவிட (ரூ.17.50 லட்சம்) 5 மடங்கு அதிகமாகும். ஏலத்தில் இடம் பெற்ற 10 இந்திய வீரர்களில் ஆண்டோவுக்கு தான் குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயிக்கப் பட்டிருந்தது. 

அடிப்படை விலை ரூ.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நடுகள வீரர் தாய் சிங்கை ரூ.86 லட்சத்துக்கு சென்னையின் எப்சி அணி வாங்கியுள்ளது. 

இவரை வாங்குவதற்கு மும்பை, நார்த் ஈஸ்ட், சென்னை எப்.சி. ஆகிய 3 அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. ஐ-லீக்கில் ராயல் வஹிண்டோ அணிக்காக ஆடி வரும் ஜாக்கிசந்த் சிங்கை வாங்குவதில் 4 அணிகளிடையே போட்டி நிலவினாலும், இறுதியில் புனே அணி ரூ.45 லட்சத்துக்கு வாங்கியது. 
 
நடுகள வீரர் அரட்டா ஸுமியை ரூ.68 லட்சத்துக்கு கொல்கத்தாவும், ஸ்டிரைக்கர் ராபின் சிங்கை ரூ.51 லட்சத்துக்கு டெல்லி அணியும், நடுகள வீரர் சேத்தியாசென் சிங்கை ரூ.56 லட்சத்துக்கு நார்த் ஈஸ்ட் அணியும் வாங்கின.
பின்கள வீரர் அனாஸ் இடதோடிகாவை ரூ.41 லட்சத்துக்கு டெல்லி அணியும், கோல் கீப்பர் கரண்ஜீத் சிங்கை அவருடைய அடிப்படை விலையான ரூ.60 லட்சத்துக்கு சென்னை அணியும் வாங்கின. நேற்றைய ஏலத்தில் 2-வது அதிகபட்ச ஏலத்தொகை கரண்ஜீத்துக்குத்தான் நிர்ணயிக் கப்பட்டிருந்தது. 

நேற்றைய ஏலத்தில் கொல்கத்தா, சென்னை, புனே, டெல்லி அணிகள் தலா 2 வீரர்களையும், மும்பை, நார்த் ஈஸ்ட் அணிகள் தலா ஒருவரையும் வாங்கின. கோவா, கேரளா அணிகள் யாரையும் வாங்கவில்லை. 

நேற்றைய ஏலத்தில் ரூ.7.22 கோடிக்கு வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.தற்போது ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள 10 வீரர்களும் கடந்த ஆண்டு ஐ-லீக் அணிகளால் விடுவிக்கப்படாததால் முதல் ஐஎஸ்எல் போட்டியில் விளையாடவில்லை. 

10 வீரர்களுக்கான ஏலத்தைத் தொடர்ந்து, மேலும் 40 இந்திய வீரர்களை தேர்வு செய்வதற்கான ‘பிளேயர் டிராப்ட்’ நடத்தப்பட்டது. இதில் 112 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் ஒரு வீரரை அவருடைய அடிப்படை விலையிலேயே தேர்வு செய்யலாம். 

குறைந்த விலையால் ஏமாற்றமடையவில்லை: சேத்ரி 
 
ஐஎஸ்எல் ஏலத்தில் ரூ.1.20 கோடிக்கு மட்டுமே விலை போனது குறித்துப் பேசிய சேத்ரி, “கடந்த 13 ஆண்டுகளாக பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறேன். என்னிடம் போதுமான பணம் இருக்கிறது. 

எப்போதுமே பணத்துக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் ஐஎஸ்எல் போட்டியில் குறைந்த விலைக்கு ஏலம்போனதால் நான் ஏமாற்றமடையவில்லை. 

உலகம் முழுவதும் விளையாடிவிட்டேன். ஆனால் நீண்டகாலமாக மும்பையில் விளையாடவில்லை. இப்போது மும்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

சிக்கிமில் பிறந்து டெல்லியில் வசிப்பவரான சுனில் சேத்ரி இந்திய அணிக்காக 87 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 

50 கோல்களுடன் அதிக கோலடித்த இந்தியர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் சேத்ரி, மோகன் பகான், ஜே.சி.டி., ஈஸ்ட் பெங்கால், டெம்போ, கன்சாஸ் சிட்டி விஸார்ட்ஸ்,

ஸ்போர்ட்டிங் லிஸ்பன் பி அணி, சர்ச்சில் பிரதர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐ-லீக்கில் பெங்களூர் எப்.சி. அணிக்காக விளையாடி வருகிறார்.
Tags:
Privacy and cookie settings