ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து நாளை மேல்முறையீடு?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக அரசு நாளை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கிற‌து. 
 தமிழக முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
விடுமுறை காலம் முடிவதற்குள் திடீரென மேல்முறையீடு செய்வ‌து தொடர்பாக அம்மாநில சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திராவுடன் அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா அவசர ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுதலை செய்தது.

“நீதிபதி சி.ஆர். குமாரசாமி அளித்த தீர்ப்பில் பல்வேறு அடிப்படை தவறுகளும், கணித பிழைகளும் இருக்கிறது.

எனவே கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, சட்டத்துறை செயலர் சங்கப்பா, அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார் ஆகியோர் கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

எனவே ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல்முறை யீடு செய்வதென‌ கடந்த 1-ம் தேதி கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட‌து.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையில் அவர‌து உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா மற்றும் சட்டத்துறை அதிகாரிகள் ஜெயலலிதா தரப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன‌ர்.

ஆச்சார்யா கேட்டுக் கொண்டதற்கிணங்க பவானிசிங்கின் உதவியாளராக இருந்த முருகேஷ் எஸ். மரடியும் கடந்த சில தினங்களாக இரவு பகலாக உழைத்தார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் வருமானம், செலவு, கடன், இருப்பு ஆகியவை குறித்து தனித்தனியாக அட்டவணை தயாரித்துக் கொடுத்தார்.

அதில் நீதிபதி குமாரசாமி தவறாக கணக்கிட்ட கடன் தொகை, முரணாக ஏற்றுக்கொண்ட வருமானம் ஆகியவற்றை சுமார் 150 பக்க பச்சை நிற முத்திரைத் தாளில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை தயாரித்துள்ள அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, அதனை கர்நாடக அரசின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப்பா, சட்ட‌த்துறை செயலர் சங்கப்பா ஆகியோருடன் விவாதித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு எதிராக வலுவான மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்வது குறித்து ஆச்சார்யா நேற்று கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திராவையும், அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரையும் சந்தித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது க‌ர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை கோருவது, ஜெயலலிதாவின் விடுதலைக்கு தடை கோருவது, ம‌க்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோருவது ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக ‘தி இந்து' விடம் ஆச்சாரியா கூறும்போது, “சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இது தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே டெல்லிக்கு அனுப்பி இருக்கிறோம்.

ஆவணங்களை இறுதி செய்யும் பணிகள் முடிந்து விட்டதால் விடுமுறை கால நீதிமன்றத்திலேயே பணிகளை தொடங்கலாம் என டெல்லி வழக்கறிஞர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனவே வழக்கமான நீதிமன்றம் தொடங்கும் வரை காத்திருக்காமல் விடுமுறை கால நீதிமன்றத்திலேயே, அதாவது திங்கள்கிழமையோ அல்லது ஓரிரு நாட்களிலோ மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என முடிவெடுத் திருக்கிறோம்.

தமிழக‌ முதல்வர் ஜெயல லிதாவின் விடுதலைக்கு தடை கோருவது உட்பட எங்களுடைய எந்த கோரிக்கையையும் இப்போது வெளிப்படையாக கூற முடியாது. எங்களுடைய கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம்” என்றார்.
Tags: