உணவுக்குழாய் பிரச்னைகள் தெரியுமா?

நாம் சாப்பிடுவது திட உணவானாலும் சரி, திரவ உணவானாலும் சரி வாயிலிருந்து வயிற்றுக்குள் செல்வது முக்கால் அடி நீளமுள்ள (25 செ.மீ.) உணவுக் குழாய் வழியாகத்தான்.
உணவுக்குழாய் பிரச்னைகள் தெரியுமா?

சுருங்கி விரியக்கூடிய தசை நார்களால் ஆன இந்த உறுப்பு, தொண்டையின் நடுப்பகுதியில் தொடங்குகிறது. குரல்வளைக்குப் பின்புறமாக அமைந்துள்ளது. 

நெஞ்சின் நடுப்பகுதியில் ஒரு குழாய் போலத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதன் அடிப்பகுதி உதர விதானத்தைக் கடந்து, சுமார் 4 செ.மீ. நீண்டு, இரைப்பையின் ஆரம்பப் பகுதியோடு இணைந்து கொள்கிறது.

உணவுக்குழாயின் உள்பக்கம் மெல்லிய சவ்வு போன்ற சளிப்படலத்தால் (Mucus membrane) ஆனது. இது உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்புத் தருகிறது. 
உணவு குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் சுருக்கு தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன. மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும் போது அது மூச்சு குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது. 

கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழைய விடாமல் தடுக்கிறது.

இந்தக் கதவு உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் அமைந்து செயல்படுகிறது.
உணவுக்குழாய் பிரச்னைகள்

வாயில் போடப்பட்ட உணவு உமிழ் நீருடன் கலந்து, முதற்கட்ட செரிமானம் நடந்து கூழ்போல் ஆனதும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது தான் உணவுக் குழாயின் முக்கிய வேலை. 

இதில் சிறிதும் பெரிதுமாக பல உடல்நலப் பிரச்னைகள் வரலாம் என்றாலும், நெஞ்செரிச்சல், உணவுக் குழாய் புற்றுநோய் என்ற இரண்டு நோய்கள் தான் அதிகம் சிரமப்படுத்தும். 

நெஞ்செரிச்சல் உணவைச் சாப்பிட்டதும் நம்மில் பலருக்கு நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படுவது வழக்கம். இந்தியாவில் 30 முதல் 50 சதவிகிதம் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது.
இவர்களில் 100ல் 20 பேருக்கு இது அன்றாடப் பிரச்னையாகவும் மீதிப் பேருக்கு மழைக்காலக் காளான் போல் அவ்வப்போது முளைக்கும் பிரச்னையாகவும் உள்ளது. 

வழக்கத்தில் நாம் நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்னை அல்ல. 

இது உணவுக் குழாய்  பிரச்னை. மருத்துவ மொழியில் இந்த நோய்க்கு ‘இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்’ (Gastro Esophageal Reflux Disease சுருக்கமாக GERD ) என்று பெயர்.

காரணம் என்ன?
காரணம் என்ன?

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து உணவுக் குழாய்க்குள் தேவை யில்லாமல் நுழைவது தான். 

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்,உணவுக் குழாயின் தசைகள் காரமான, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. 

இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கி விடும். இதனால் அழற்சி ஏற்பட்டு நெஞ்செரிச்சல் உண்டாகும்.
மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப் பிட்டால், உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப் போன சல்லடை வலை போல ‘தொள தொள’ வென்று தொங்கி விடும். 

விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும் போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்து விடும். 

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவு குழாயின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். ‘அல்சர்’ எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
உணவுக்குழாய் பிரச்னைகள்

வயிற்றில் அதிக அழுத்தம் இருந்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட இதுவே காரணம். 

வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கி விடும்.

சிலருக்கு இரைப்பையின் சிறு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus hernia) உணவுக் குழாயை அழுத்தும். 
இதன் விளைவாக குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்தது போல் இரைப்பை அமிலம் உணவுக் குழாய்க்குள் படையெடுக்க, அங்கு புண் உண்டாகி நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும். 

பலருக்கு உணவு சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும் போது ஏற்படும். பொதுவாக, இந்தத் தொல்லை இரவு நேரத்தில் தான் அதிகமாக இருக்கும்.

என்ன பரிசோதனை செய்வது?
என்ன பரிசோதனை செய்வது?

நெஞ்செரிச்சல் தானே....... தன்னால் சரியாகி விடும் என்று மட்டும் அலட்சியமாக இருக்க வேண்டாம். 

இந்தப் பிரச்னை உணவுக் குழாயி லிருந்து வருகிறதா, இதயத்தி லிருந்து வருகிறதா என்று தெளிவு படுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம். காரணம், 

சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். 
இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்கள் நோயின் துவக்கத்திலேயே ‘கேஸ்ட்ரோ எண்டோஸ்கோப்பி’ (Gastro endoscopy) மற்றும் இசிஜி (ECG) பரிசோதனை களைச் செய்து கொண்டால் காரணம் தெரிந்து விடும்.

சிகிச்சை என்ன?
சிகிச்சை என்ன?

இரைப்பையில் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் அமிலத்தைச் சமன் செய்யும் மருந்துகளும் தரப்படுகின்றன. 
இவற்றுடன் அமிலம் பின்னோக்கிச் செல்வதைத் தடுக்க ‘புரோகைனட்டிக்’ மருந்துகள் (Prokinetic drugs) மற்றும் வாந்தி தடுப்பு மருந்துகள் தரப்படுகின்றன. இவற்றை மருத்துவர் கூறும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டியது முக்கியம்.
Tags:
Privacy and cookie settings