ஆம்புலன்ஸ் விமானம் தரை இறக்கப்பட்ட.. 10 வினாடிகள் !

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து இதய நோயாளிகளை ஏற்றிக்கொண்டு குர்கான் நோக்கி வந்த ஆம்புலன்ஸ் விமானம் தெற்கு டெல்லியில் உள்ள நஜப்கர் அருகே உள்ள வயலில் கடந்த 24-ம் தேதி தரையிறக்கப்பட்டது
விமானத்தின் என்ஜினில் திடீரென்று கோளாறு ஏற்பட்டதால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு உயிரிழப்பு ஏதும் ஏற்படாமல் திறமையாக விமானத்தை தரையிறக்கினார். விமானத்தை தரையிறக்கிய அந்த பரபரப்பான நிமிடங்கள் குறித்து விமானி அமித் குமார் கூறியதாவது:-

விமானம் மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென முதல் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது. இருப்பினும் இரண்டாவது என்ஜின் மூலம் விமானத்தை 

இயக்கி விமான நிலையத்தில் தரையிறக்கி விடலாம் என்று நினைத்து தொடர்ந்து சென்றோம். ஆனால் அடுத்த 10 நிமிடத்திலேயே இரண்டாவது என்ஜினும் செயலிழந்துவிட்டது.

அப்போது விமான நிலையத்தை அடைய 15 கி.மீ. தொலைவு இருந்ததால் விமானநிலையத்தை சென்றடைய முடியாது என்று தெரிந்துவிட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரண்டுவிதமாக யோசிக்காமல் நஜப்கர் நகரத்தை நோக்கி விமானத்தை திருப்பினோம்.

நகரை நெருங்கியபோது சுமார் 3000 அடிக்கும் குறைவான உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. 

அப்போது பயணிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற பதட்டமும், நோக்கமுமே என்னிடம் இருந்தது. எனவே, கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினோம்.
காயிர் கிராமத்திற்கு மேல் சுமார் 100 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்தபோது தரையை தொடுவதற்கு 10 வினாடிகளே இருந்தது. அப்போது மின்கம்பங்கள் எதுவும் இல்லாத திறந்த , வயல்வெளி தெரிந்தது. 

இதனால் அங்கு தரையிறக்க முடிவு செய்தோம். எங்கள் திட்டப்படி வெட்டவெளியில் மோதியபடி விமானம் தரையிறங்கியது. பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறியது என்றார்.
Tags: