இயர்பட்ஸ் வைத்து காது குடையலாமா?

காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது. 
இயர்பட்ஸ் வைத்து காது குடையலாமா?
தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்ற போது, தொடாதீங்க, என் காதைத் தொட்டால் உயிர் போகிற வலி என்றாள்.

என்ன நடந்தது என விசாரித்தேன். வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று என்றாள். காது கடித்தால் என்ன செய்வீர்கள்? விசாரித்தேன். 
நெருப்புக் குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறது தான் வேலை என்றான் கூட வந்தமகன். காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றி விட்டது. 

இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காது வலியோடு துடித்து வந்தான். நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். 

காதுக்குள் தண்ணி போய் விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகி விட்டது.

காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும் போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது. உட்காதுக்குள் நீர் போய் விட்டதோ என பயப்பட வேண்டிய தில்லை.

காதுக்குடுமி நீரில் ஊறிப்பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டு விடும்.
இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்ற போது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது.
நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். 

குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப் படுத்தப் போய் குழந்தையைச் செவிடாக்கி இருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.

காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங் களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை.

காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்ப தற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டிய தில்லை.
இயர்பட்ஸ் வைத்து காது குடையலாமா?
காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும் போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள். 

பின் தலையை மறு பக்கமாகச் சரிக்க நீர் வெளியேறி விடும். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப் படுத்தலாம். காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும். 
ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப் படுத்தக் கூடாது. இப்படிச் சுத்தம் செய்யும் போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்து விடும்.
Tags: