திருச்சி என்ஜினீயரிங் மாணவி கழுத்தை இறுக்கி கொலை !

வேப்பந்தட்டை அருகே திருச்சியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவி துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். அவரது காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி என்ஜினீயரிங் மாணவி

பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி காலனித்தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மனைவி நீலாவதி. இவர்களது இளைய மகள் கனிமொழி (வயது 18). 

இவர் திருச்சியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே கனிமொழியும், அதே ஊரைச்சேர்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.

பிரகாஷ் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்துக்கொண்டு வேப்பந்தட்டை அருகே விஜயபுரம் கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் குத்தகைக்கு பயிர் செய்து வந்தார். 

இவர்களது காதல் விவகாரம் கனிமொழியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடும் வாக்குவாதம்

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து திருச்சியில் இருந்து பெரம்பலூர் திரும்பிய கனிமொழியை புதிய பஸ்நிலையத்தில் இருந்து பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு விஜயபுரம் சென்றார்.

அங்கு வயலையொட்டி உள்ள வீட்டிற்கு கனிமொழியை அழைத்து சென்றார். அப்போது அங்கு பிரகாசுக்கும், கனிமொழிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கனிமொழியின் தந்தை அய்யாவுக்கு போன் செய்த பிரகாஷ், உங்களது மகள் கனிமொழியை கொன்று விட்டேன். நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

கொடூரக்கொலை

இதனால் அதிர்ச்சியடைந்த கனிமொழி குடும்பத்தினர் இது பற்றி அரும்பாவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசாருடன் விஜயபுரம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு துப்பட்டாவால் கனிமொழி கொடூரமாக கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். 
இதனை தொடர்ந்து கனிமொழியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரகாசை தீவிரமாக தேடி வருகின்றனர். 

என்ஜினீயரிங் கல்லூரி மாணவி அவரது காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings