பொட்டு வைப்பதில் பிரச்சினையா?

நம் உடலை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்வதில் எத்தனை மெனக்கிட்டாலும் சில வேளைகளில் நம்மை அறியாமல் சில ஆபத்தான சாதனங்களை அழகுக்காக பயன் படுத்திக் கொள்கிறோம்.

கூடவே அழையா விருந்தாளியாக வந்து சேர்கிறது 'ஓவ்வாமை'. அதனை தவிர்க்க சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.

பொட்டு வைப்பதால் சருமத்தில் பிரச்சினை ஏற்படுமா?

பொட்டு வைப்பதில் பொதுவாக பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. ஆனால் பொட்டுகளை ஒட்ட வைக்கும் பசையின் தரத்தால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதுண்டு.

ரசாயன பொருளால் உருவாக்கப்பட்டிருக்கும் பசை, தொடர்ந்து நெற்றியில் ஒட்டியிருக்கும்போது அந்தப் பகுதி நிறம்மாறி, வடு உருவாகிவிடும்.

உயர்ந்த வகை பவுடர்களை பயன்படுத்தினால் முகத்தில் சரும நிற மாற்றம் ஏற்படுமா?

பவுடர் மூலம் நிரந்தரமான சரும மாற்றம் எதுவும் ஏற்படாது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் உலர்ந்த சருமத்தைக் கொண்டவர்கள் பவுடர் பூசாமல் இருப்பது நல்லது. 

பவுடரில் மணத்திற்காக சில ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. அவைகள் சிலருடைய உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. ஆனால் வெயில் சருமத்தில் விழுவதைத் தடுக்க சன் ஸ்கிரீன் கிரீம் பூசுவது நல்லது.

எண்ணை தேய்த்துக் குளிப்பது சருமத்திற்கு நல்லதா?

எண்ணை தேய்த்து குளிப்பது என்பது இந்தியாவின் ஒரு பகுதியில் இருக்கும் பாரம்பரிய பழக்கம். அதனால் சருமத்திற்கு மினுமினுப்பு கிடைக்கும் என்பது உண்மைதான். 

வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு இது நல்ல பலனளிக்கும். ஆனால் எண்ணை சருமம் கொண்டவர்களுக்கு மேலும் எண்ணையை தேய்த்து எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.

எண்ணையை தேய்த்துவிட்டு சோப்பு போட்டு குளிக்கும்போது சருமத்தில் இருக்கும் எண்ணையும் சேர்ந்து தண்­ணீரோடு போய்விடும்.

வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் குளித்த பின்பு, நனைந்த துணியால் சருமத்தில் இருக்கும் தண்­ணீரை ஒற்றி எடுக்க வேண்டும்.

அதன்பின்பு மிகக் குறைந்த அளவு எண்ணையை எடுத்து, லேசாக சருமத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும். குளிப்பதற்கு முன்பு அதிகமாக எண்ணை பூசிக்கொள்வதைவிட, குளித்த பின்பு சிறிதளவு எண்ணை பூசிக்கொள்வதே சிறந்தது.

தினமும் எத்தனை தடவை குளிக்கவேண்டும்?

எத்தனை தடவை குளிக்கிறோம் என்பதை விட, உடலில் அழுக்கு சேரக்கூடாது என்பதுதான் முக்கியம். மூன்று நேரம் குளித்த பின்பும் உடலில் அழுக்கு நீங்காமலே இருந்தால் எந்த பயனும் இல்லை. 

வியர்வை, அழுக்கு, வேலை பார்க்கும் அல்லது வசிக்கும் சூழலுக்கு தக்கபடி உடலில் இருக்கும் அழுக்கை போக்கும் விதத்தில் குளிக்கவேண்டும். தினமும் இரண்டு தடவை குளிக்கலாம்.
Tags: