உங்கள் ஊழியர்களைக் கட்டிப் பிடிக்கிறீர்களா?





உங்கள் ஊழியர்களைக் கட்டிப் பிடிக்கிறீர்களா?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
உங்கள் வாடிக்கை யாளர்களைக் கட்டிப் பிடிக்கப் போகிறவர்கள் உங்கள் ஊழியர்கள். அவர்களை யார் கட்டிப்பிடிப்பது? அவர்களை யார் உண்மையுடன், உவகையுடன், உத்வேகத்துடன்,
உங்கள் ஊழியர்களைக் கட்டிப் பிடிக்கிறீர்களா?
உணர்ச்சி பூர்வமாக ஊழியம் புரிய வைப்பது? சாட்சாத் முதலாளியான நீங்கள் தான் என்கிறார் ஜேக் மிட்சல். 

போன வாரம் பார்த்தோமே, அவரே தான். அமெரிக்காவில் ‘மிட்சல்ஸ் ரிச்சர்ட்ஸ்’ என்ற வெற்றி கரமான துணிக் கடைகளின் ஓனர்.

வாடிக்கையாளரைக் கட்டிப் பிடிப்பது எப்படி என்று விளக் கியவர் ‘Hug your people’ என்ற தனது இரண்டாவது புத்தகத்தில் கடை ஊழியர்களை நடத்தும் விதத்தை பளார் என்று புரியும்படி அறைந்தி ருக்கிறார்.

பலரும் பணத்திற்கு பணி புரிபவர்கள்தான். இல்லை என்று சொல்ல வில்லை.ஆனால் பணம் மட்டுமே பிரதானம் இல்லை. பாராட்டப்பட வேண்டும் என்ற விருப்பம் பலருக்கும் உண்டு.

அன்பாய் நடத்தப்பட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் எத்தனை முதலாளிகள் ஊழியர்களை அன்பாய் நடத்துகிறார்கள்?

மதிப்பு அளியுங்கள் 
‘வேலைக்கும் ஆள் கிடைக்க வில்லை’, ‘சொல்ற வேலையை ஒழுங்காய் செய்வதில்லை’, ‘பணத்திற்கு மாரடிக்கிறார்கள்’ என்று ஊழியர்களை குறை சொல்லிப் பயனில்லை. 

ஊழியர் களை மனதாரக் கட்டிப் பிடியுங் கள். பிறகு பாருங்கள், அவர்கள் உங்கள் கடையை தங்கள் கடை யாய் பாவிப்பார்கள்.

வேலையை விரக்தியாய், விட்டேத்தியாய், வெட்டியாய் செய்யாமல் மகிழ்ச்சி யுடன், மனதார செய்வார்கள். 

வாடிக்கையாளர்களைக் கட்டிப் பிடிப்பார்கள். நீங்கள் வெற்றியைக் கட்டிப் பிடிப்பீர்கள்! `என் கம்பெனி என் மீது பரிவு காட்டுகிறது.

என் மகிழ்ச்சிக்கு இயங்குகிறது’ என்ற எண்ணத்தை ஊழியர் மனதில் விதைப்பதே கட்டிப் பிடிப்பது என்கிறார் மிட்சல்ஸ். 

கோடிக்கணக்கில் வியாபரம் செய்யும் தன் கடையின் ரகசியம் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என்கிறார். பெரியதாய் ஒன்றும் இல்லை.

ஊழியர்களிடம் அன்பாய் நடந்து அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, ஊழியம் செய்வதில் பெருமிதம் கொள்ள வைத்து 

முடிவெடுப்பதில் அவர்களையும் சேர்த்துக் கொண்டு அவர்கள் சேவையை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இது தான் கட்டிப்பிடி வைத்தியம்’ என்கிறார்.

அன்பாக நடத்துங்கள் 
கடையை வாடிக்கையாள ருக்குப் பிடிக்கும் வண்ணம் செய் பவர்கள் தங்கள் ஊழியர்களுக்கும் பிடிக்கும் வண்ணம் செய்கிறார் களா?

விழித்திருக்கும் நேரத்தில் பாதிக்கும் மேல் கடையில் கழிக்கும் ஊழியர்களுக்கு பிடித்த வண்ணம் கடை இருக்கவேண்டாமா?

பல கடைகளில் ஊழியர்களுக்கும் மேல்மட்ட நிர்வாகிகளுக்கும் தனித் தனி சாப்பிடும் இடம், பாத்ரூம் இருப்பதைப் பார்க்கலாம். உங்கள் வாழ்வு செழிக்க உழைப்பவர்களை இதை விட உதாசீனப்படுத்த முடியாது.

டீ கடைகளில் இரண்டு டம்ளர் முறையை ஒழிக்கவேண்டும் என்கிறார்கள். இதுவும் அந்த ரகம் தானே. அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டால் செரிக்காதா?

அருகே இருப்பவர்களின் மனநிலையை நாமும் நம்மை அறியாமலேயே பெறுகிறோம் என்பதை சேர்ந்து இருப்பவர்களின் பிளட் பிரெஷர், 

இதயத் துடிப்பு, சரும டெம்ப்ரேச்சர் போன்றவற்றை அளந்து ஆராய்ச்சிகளில் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
ஊழியர்களை அன்பாய் நடத்தி அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் போது அந்த மகிழ்ச்சியே தொற்று வியாதியாய் கடை முழுவதும் பரவும் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இது.

ஊழியரை அன்பாய் நடத்துங்கள். அன்பாய் கட்டிப் பிடிப்பது காசில்லாத ஃபிரீ சமாச்சாரம் சார்.

முழுமையாக நம்புங்கள் 

உழைக்கும் ஊழியர்களைக் கொஞ்சம் முழுமையாய் நம்பி னால் தப்பில்லையே. நீங்கள்தானே இன்டர்வியூ செய்து தேர்வு செய்தீர்கள். 

அவர்களை சதா சந்தேகப் பட்டால் தேர்வு செய்த உங்கள் திறமை மீதே சந்தேகப்படுகிறீர்கள் என்று தானே அர்த்தம்?

கடை முழுக்க சிசிடிவி கேமரா பொறுத்தி அனைத்தையும் ரூமில் உட்கார்ந்து டீவியில் மாட்ச் பார்ப்பது போல் முதலாளிகள் பார்ப்பது எதற்கு? 

ஊழியர்கள் உங்கள் சொத்து. ஒழுங்காய் வேலை செய்யாதவர் களைத் திருத்துங்கள்.

முடியவில்லை என்றால் வீட்டிற்கு அனுப்புங்கள். அதை விட்டு விட்டு தி. நகர் டிராஃபிக் போலீஸ் மாதிரி கேமிரா வைத்து டீவியில் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்!
கடை விற்பனை, வளர்ச்சி விகிதம், லாப நஷ்ட கணக்கு இதை யெல்லாம் பல நிர்வாகங்கள் ஊழியர்களிடம் முழுமையாகச் சொல்வதில்லை. 

உழைப்பவர் களுக்குத் தெரியாமல் இவை யாருக்குத் தெரிந்து என்ன ஆகப் போகிறது.

கிரிக்கெட் மாட்ச் ஆடும் போது ஆடுபவரிடம் ஸ்கோர் எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது, போய் மரியாதையாய் ஆடு என்றால் எப்படி ஆடுவார்?
கொஞ்சம் யோசிங்க பாஸ்!

பெருமிதம் கொள்ள வையுங்கள் 

உங்கள் கடை ஊழியரை யாராவது ‘என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்டால் பெருமையுடன் ‘இந்தக் கடையில் வேலை செய்கிறேன்’ என்கிறாரா இல்லை ‘கடையில சேல்ஸ்மேனா இருக் கேன்’ என்கிறாரா?

உங்களிடம் வேலை செய்வதைப் பெருமையாக நினைக்க வில்லை என்றால் அவர் கடையில் என்னத்தை பெரியதாக கிழிப்பார்? இல்லை நீங்கள் தான் என்ன சாதிப்பீர்கள்?

ஓனர் என்பதற்காக காலை முதல் கிளம்பும் வரை ரூமிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும் என்று ஏதாவது நேர்த்திக் கடனா? உங் கள் கடை தானே சார், காலார கடை முழுவதும் நடங்கள்.

ஒவ் வொரு செக்‌ஷனாக சென்று ஊழியர்களோடு பேசுங்கள். நூறு ஊழியர்களின் பெயராவது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். தெரியவில்லை என்றால் முதல் காரியமாய் தெரிந்து கொள்ளுங்கள்.

ஊழியர்களிடம் என்னப்பா எப்படி இருக்க என்று நலம் விசாரியுங்கள். 

தன் எம்டி தன்னை விசாரித்தார் என்று எத்தனை பெருமிதம் கொள்வார் தெரியுமா? தன் உடல் வருத்தி உங்களுக்காக உழைப்பார். புரிந்து கொள்ளுங்கள்.
முடிவெடுப்பதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஊழியர் உங்களுக்கு வேலை செய்கிறாரா, உங்களோடு வேலை செய்கிறாரா? வித்தியாசம் புரிகிறதா? 

முக்கிய முடிவுகளை எடுக்கும்போது அவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்கள் சொல்வதைச் செய்ய வேண்டும் என்பதில்லை.

தன்னை மதித்துக் கேட்கிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். வேலையை ரிசைன் செய்பவர்கள் பலர் சொல்லும் காரணம்: என்னிடம் எதுவும் கேட்க மாட்டார்கள்.

ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். நீங்களும் அப்படி செய்யாதீர்கள். கடையில் உழைக்கும் ஒவ் வொருக்கும் தங்கள் எண்ணங் களை, ஐடியாக்களை கூறும் சந்தர்ப் பத்தை அளியுங்கள்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கை யாளர்களை சந்தித்து பழகும் அவர் களுக்கு எத்தனை விஷயங்கள் தெரிந்திருக்கும். அதைப் பெற்று அதன்படி உத்தி அமைப்பது எத்தனை சக்தி வாய்ந்தது. செய்யுங்களேன்!
பாராட்டுங்கள்

ஊழியர்களுக்கு மதிப்பு கொடுங்கள். பல இடங்களில் ரிடையர் ஆகும் அன்று தான் கூப்பிட்டு வாட்ச் கொடுப்பார்கள். அது வரை அவர் மணி பார்த்த தில்லையா.

என்ன கன்றாவி இது? இருக்கும் போதே நன்றாக வேலை செய்பவர்களை, விற்பனை இலக்கை அடைந்த வர்களை, 

நல்ல ஐடியா கொடுத்து வியா பாரத்தை உயர்த்து பவர்களை வலிய சென்று பாராட்டுங்கள். அனைவரோடும் சேர்ந்து கை தட்டுங்கள்.
அந்த சத்தத்தின் ஸ்பரிசத்தை விடவா நீங்கள் கொடுக்கும் பிசாத்து பணமும் வாட்சும் அவருக்கு பெரியதாகத் தெரியப் போகிறது? சிந்தியுங்கள்! 

ஊழியர்களுக்கும் சொந்த பிரச்சினைகள் இருக்கும். அவர் களும் உங்கள் குடும்பம்தானே. முடிந்த வரை உதவுங்கள்.

அவர் வலியை நீக்க முயற்சியுங்கள். அட்லீஸ்ட் சாய்ந்து கொள்ளத் தோள் கொடுங்கள். நல்ல மனிதனாய் இல்லாதவன் நல்ல தலைவனாக இருக்கவே முடியாது. உங்கள் ஊழியர்களுக்கு நல்லவனாய் இருங்கள்.

அன்பாய் நடத்துங்கள். கட்டிப் பிடியுங்கள். ஊழியர்கள் மனம் நிறைந்தால் தான் உங்கள் கல்லா ஃபுல்லாகும். இதை மறக்காதீர்கள்!
Tags: