மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்பு தானம் !

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் இதயத்தை ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக கொச்சிக்கு கொண்டு சென்று அங்கு இதய சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
விபத்து

திருவனந்தபுரம் மாவட்டம் கோரணி என்ற இடத்தை சேர்ந்தவர் சதீசன். இவருடைய மகன் விஷால்(15) கடந்த 16–ந் தேதி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

டாக்டர்கள் பரிசோதித்து மாணவன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவனது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து விஷாலின் இதயத்தை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை

அதன் அடிப்படையில் கொச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து வந்த இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜோஸ் சாக்கோ தலைமையில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரிக்கு நேற்று காலையில் வந்து சேர்ந்தனர். 

தொடர்ந்து மாணவனின் உடலில் இருந்து இதயத்தை பிரித்து எடுத்த டாக்டர்கள் பாதுகாப்பான பெட்டியில் வைத்து கார் மூலம் விமான நிலையம் கொண்டு சென்று அங்கு தயாராக இருந்த ஏர் ஆம்புலன்சில் பிற்பகல் 3 மணிக்கு கொச்சி கொண்டு செல்லப்பட்டது. 

தொடர்ந்து கொச்சி மருத்துவமனையில் நடந்த இதய மாற்று அறுபை சிகிச்சை மூலமாக மாணவனின் இருதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.

நன்றி

3 மணி நேரம் நடைபெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் அந்த பெண் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். மாணவனின் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவையும் தானம் செய்யப்பட்டு உள்ளது.

கல்லீரல் கிம்ஸ் மருத்துவமனையிலும், சிறுநீரகம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஒப்படைக்கப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏர் ஆம்புலன்ஸ் வசதியினை செய்து கொடுத்த முதல்–மந்திரி பினராயி விஜயனுக்கு பெண் வீட்டார் நன்றி தெரிவித்தனர்.
Tags: