ஆதார் அட்டை | Aadhar Card !

ஆதார் அட்டை - கைவிட மத்திய அரசு முடிவா? ஆதார் அட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டது. இதை செயல்படுத்த தனி ஆணையம் அமைக்கப் பட்டது.
இந்த ஆணையம் சட்டத்தின் அங்கீகாரம் இன்றி தொடங்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் பிரவீண் தலால் உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் அரசியல் சாசன அந்தஸ்து குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுதவிர ஆதார் அட்டை திட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம், அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டையை கட்டாயப் படுத்தக் கூடாது என்று உத்தர விட்டது.

ஆனால் இப்போது அமைந்துள்ள புதிய அரசு ஆதார் அட்டை திட்டத்தை தொடருவதா, வேண்டாமா என்று தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் அண்மையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள “ஆதார் அடையாள அட்டை” நாட்டில் உள்ள 51 கோடி குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

டெல்லி, திரிபுரா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் 90 சதவீதம் ஆதார் அட்டை வழங்கும் பணிகள் முடிவடைந்ததாகவும், யுனியன் பிரதேசங்களில் 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

எனினும் இதற்கு மாற்றாக அனைத்து குடிமக்களுக்கும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானோர் ஆதார் அட்டை பற்றிய திட்டத்தைக் கைவிட பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிந்துரைகள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. அச்சுதன் சில நாட்களுக்கு முன்பு பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், அமெரிக்காவின் உளவுப் பிரிவான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.), ஆதார் அட்டைக்காக சேகரிக்கப்பட்ட ரகசிய தகவல்களை திருடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பின்னணியில் ஆதார் அட்டை திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags: